
‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய அண்ணாமலையின் யாத்திரை, இன்று மானாமதுரை சென்றுள்ளது. அங்கு பலதரப்பட்ட மக்களையும் அவர் சந்தித்து வருகிறார்.
முன்னதாக, அண்ணாமலையின் யாத்திரை நேற்று சிவகங்கை சென்றது. அவருடன் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். சிவகங்கை யாத்திரையின்போது பேசிய அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை விமர்சித்து பேசினார். மேலும், சிவகங்கை அரண்மனையில் ராணி மதுராந்தகி நாச்சியாரையும் அண்ணாமலை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது, பொன்.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.
பட்டியல் இன மக்களுக்கு துரோகம்..! திமுகவின் உண்மை முகம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது - எடப்பாடி பழனிசாமி
அதன்தொடர்ச்சியாக, சிவகங்கை யாத்திரை குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “என் மண் என் மக்கள் பயணம், வீரம் விளைந்த சிவகங்கை மண்ணில் அமைந்தது மகிழ்ச்சி. மக்களைச் சந்தித்து, பிரதமர் மோடியின் ஒன்பதாண்டு கால சாதனைகளைக் கூறும் நமது பயணத்தின் பெயர் 'என் மண் என் மக்கள்'. மத்திய அரசின் மக்களுக்கான நலத்திட்டங்கள், அதன் மூலம் பயனடைந்த இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழில் முனைவோர்கள் என கோடிக்கணக்கானோர் நம்மோடு இருக்கிறார்கள்.
ஆனால், திமுக ஒரு நடைபயணம் சென்றால், அதன் பெயர் 'என் மகன் என் பேரன்' என்பதாகத்தான் இருக்கும். சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாதாமாதம் சம்பளம் கொடுத்து ஊழலுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது திமுக.” என்று பதிவிட்டுள்ளார்.