
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் இனாம்புதூர் ஊராட்சி வையமலைப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆரோக்கியராஜ்(45) ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று பிற்பகலில் பள்ளிக்கு மதுபோதையில் தள்ளாடியபடி வந்த ஆரோக்கியராஜ் ஃபுல் மப்பில் மயங்கினார். இதுதொடர்பான வீடியோ வைரலானது. இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் சஸ்பெண்ட்
பின்னர் சம்பந்தப்பட்ட ஆசிரியரை மருத்துவ பரிசோதனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் அவர் மதுபோதையில் இருந்தது உறுதியானதை அடுத்து ஆரோக்கியராஜை சஸ்பெண்ட் செய்து வட்டார கல்வி அலுவலர் லதா உத்தரவிட்டார். இந்நிலையில் ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளிக்கு வருவதென்பது, பள்ளிக் கல்வித் துறையின் அவலநிலையை வெளிக்காட்டுகிறது என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறையின் அவலநிலை
இதுதொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, வையமலை பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், மதுபோதையில் வகுப்பறைக்கு வந்திருக்கிறார் ஆசிரியர் ஒருவர். ஏற்கனவே, திருச்சி மாவட்டத்தில், வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் மாணவ மாணவியர் கல்வி கற்கும் நிலையில், தற்போது, ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளிக்கு வருவதென்பது, பள்ளிக் கல்வித் துறையின் அவலநிலையை வெளிக்காட்டுகிறது.
உங்கள் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதுமா?
ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை, பள்ளிக் கல்வித் துறையில் வகுப்பறைகள் பற்றாக்குறை, அதல பாதாளத்தில் கிடக்கும் சட்டம் ஒழுங்கு என, திமுக அரசின் அனைத்துத் துறைகளுமே தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், சூப்பர் சிஎம் கையில் ஆட்சியைக் கொடுத்து விட்டு நாளொரு நாடகம் நடித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ, இவை பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், மீண்டும் மக்களை ஏமாற்றக் கிளம்பிவிட்டார். உங்கள் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதுமா முதலமைச்சர் அவர்களே? பள்ளி மாணவ, மாணவியர் எதிர்காலத்துக்கு யார் பொறுப்பு? என கேள்வி எழுப்பியுள்ளார்.