
பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்ற வாக்குறுதியை நான்கு ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றாமல், விவசாயிகளை வஞ்சிப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு அமைச்சர் பெரியகருப்பன் தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு எண்.33-ல் தெரிவித்துள்ள படி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்கடன் மற்றும் நகை கடன்களை தள்ளுபடி செய்து அவற்றிற்கு போதிய நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்து அவர்கள் பெற்ற கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்தது.
இதையும் படிங்க: பயிர் கடன் தள்ளுபடி எப்போது? திமுகவின் வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகள்! ஆளுங்கட்சியை விடாத அண்ணாமலை
மேலும் 2021ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி அன்று வரை கூட்டுறவு சங்கங்களின் சிறு, குறு விவசாயிகள் 16,43,347 நபர்கள் பெற்றிருந்த பயிர்கடன்கள் ரூ.12,110.74 கோடி அளவிலான தள்ளுபடிக்கான தொகையை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகத்தின் நிதிநிலை கடந்த கால அரசால் கஜானா காலி செய்த நிலையிலும் விவசாயிகள் பாதிக்கப்பட கூடாது என்ற உயரிய நோக்கத்தோடு அதற்கு நிதி ஒதுக்கி விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாய பெருங்குடி மக்களின் வாழ்கையை காப்பாற்றியது திமுக அரசு தான் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுகவில் அமைச்சராவதற்கு முதல் தகுதியே, பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதுதான் என்பதை தனது அறிக்கை மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார். என அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: பயிர்க் கடன் தள்ளுபடி என்ற திமுக தேர்தல் வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்று நாங்கள் நேற்று அறிக்கை வாயிலாக எழுப்பிய கேள்விக்கு, ஊர் உறங்கிய பின்னர், நள்ளிரவில் பதிலளித்திருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன். திமுக ஆட்சியில் விடியாது என்பதில், அமைச்சருக்கு அத்தனை நம்பிக்கை.
கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், இதற்கு முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.12,110.74 கோடி கூட்டுறவு பயிர்க் கடனை தள்ளுபடி செய்தோம் என்று, கொஞ்சம் கூடக் கூசாமல் பொய்யைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் அமைச்சர். திமுகவில் அமைச்சராவதற்கு முதல் தகுதியே, பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதுதான் என்பதை தனது அறிக்கை மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
தமிழக அரசு வெளியிட்டுள்ள கொள்கைக் குறிப்பிலேயே, கடந்த 2021 - 2022 முதல் 2023 - 2024 வரை, தள்ளுபடி செய்யப்பட்ட கூட்டுறவு பயிர்க் கடன் ரூ.4,455.37 கோடி மற்றும் நிலுவையில் இருக்கும் கடனுக்கான வட்டித் தொகை ரூ.1,430.27 கோடி என்று கூறப்பட்டுள்ளது. இதை எப்படிக் கூட்டினாலும், அமைச்சர் கூறும் ரூ.12,110.74 கோடி வரவில்லை. நபார்டு வங்கி மறு நிதியை எல்லாம் கணக்கில் காட்டி சமாளிக்க முயன்று தோற்றிருக்கிறார் அமைச்சர். கணிதப் பாடத்தில், முதலமைச்சர் முதற்கொண்டு திமுகவினர் எத்தனை திறமையானவர்கள் என்பதைத் தமிழக மக்கள் அறிவார்கள். அப்படி இருக்கையில், இப்படி ஒரு பொய் சொல்ல வெட்கமாக இல்லையா அமைச்சர் அவர்களே?
நான்கு ஆண்டுகால டிராமா மாடல் ஆட்சியில், விவசாயிகளுக்குச் செய்த திட்டங்களாகப் பட்டியலிட்டிருக்கும் அமைச்சர், விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு, டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்துப் போராடிய 11,000 விவசாயிகள் மீது வழக்கு போன்றவற்றையும் சேர்த்திருந்தால், அந்தப் பட்டியல் நிறைவு பெற்றிருக்கும். நகைக் கடன், கல்விக் கடன், பயிர்க் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து, பொதுமக்களைக் கடனாளியாக்கிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் கண்துடைப்புக்காக சிறிய அளவில் தள்ளுபடி செய்து மக்களை ஏமாற்றுவதைக் கேள்வி கேட்டால், உங்களுக்கு கோபம் வேறு வருகிறதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.