சூர்யா சிவாவுக்கு மீண்டும் பாஜகவில் பொறுப்பு: அண்ணாமலை அறிவிப்பு!

Published : Nov 02, 2023, 04:17 PM ISTUpdated : Nov 02, 2023, 04:29 PM IST
சூர்யா சிவாவுக்கு மீண்டும் பாஜகவில் பொறுப்பு: அண்ணாமலை அறிவிப்பு!

சுருக்கம்

பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா சிவாவுக்கு மீண்டும் கட்சியில் பொறுப்பு வழங்கப்படுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக பேசியதால் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா சிவாவுக்கு மீண்டும் கட்சியில் பொறுப்பு வழங்கப்படுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்து பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சூர்யா சிவா கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடைப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க சூர்யாசிவா, தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார். தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்.” என கூறப்பட்டுள்ளது.

திமுக மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா,  திமுக மீதும் தனது தந்தை மீதுமான அதிருப்தி காரணமாக பாஜகவில் இணைந்த அவர், மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமான நபராக வலம் வந்தார். பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

இதனிடையே, பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சியுடன் சூர்யா சிவா பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில், டெய்சிக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்ததுடன், காது கூசும் வகையில் கெட்ட வார்த்தைகளை உபயோகித்து மிகவும் தரக்குறைவாகவும் சூர்யா சிவா விமர்சித்திருந்தார்.

ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததுதான் விஜயகாந்தின் வீழ்ச்சிக்கு காரணம் - சீமான்

இதைத் தொடர்ந்து, கட்சி நிகழ்ச்சியில் 6 மாதங்கள் பங்கேற்க சூர்யாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து பாஜகவில் இருந்து விலகுவதாக சூர்யா சிவா அறிவித்தார். தொடர்ந்து சில காலம் அமைதியாக இருந்தவர், அண்ணாமலையின் பொய் பிம்பம் உடையும் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் பரபரப்பை கிளப்பினார். அதன் தொடர்ச்சியாக, வருகிற 5ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அக்கட்சியில் சூர்யா சிவா இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதன்பிறகு, அண்ணாமலையை பற்றி பல்வேறு விஷயங்களை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக, பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா சிவாவுக்கு மீண்டும் கட்சியில் பொறுப்பு வழங்கப்படுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சூர்யா சிவா தான் வகித்து வந்த பதவியிலேயே மீண்டும் தொடரலாம் எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரே கட்சி.. ஒரே மேடை.. எம்ஜிஆர்–கருணாநிதி பிரிவுக்கு இந்த சம்பவம் தான் காரணமா?
பெண்களுக்கு ஜாக்பாட்.. தொழிலதிபராக சூப்பர் வாய்ப்பு.. ரூ.10,00,000 அள்ளிக்கொடுக்கும் அரசு..!