
அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் தேடல் குழுவை மாற்றி அமைக்க கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலை கழகம் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தராக இருந்த, கல்யாணி மதிவாணன் ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகளாகியும், துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. துணை வேந்தரை நியமிக்க, சென்னை பல்கலை முன்னாள் பேராசிரியர், முருகதாஸ் தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டது
சென்னை பல்கலை துணை வேந்தராக இருந்த தாண்டவன் ஓய்வு பெற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. புதிய துணை வேந்தரை நியமிக்க, கல்வியாளர் வேதநாராயணன் தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டது
அண்ணா பல்கலை துணை வேந்தராக இருந்த, ராஜாராம் ஓய்வு பெற்று ஓராண்டு ஆகிவிட்டது. இன்னும் துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை. இதற்கு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் துணை வேந்தர் பாஸ்கரன் தலைமையில், தேடல் குழு அமைக்கப் பட்டது.
கவர்னர் வித்யாசாகர் ராவ், அண்ணா பல்கலை கழக பாட்டமளிப்பு விழாவிற்காக சென்னை வந்த போது உடனே பட்டியல் சமர்ப்பிக்க தேடல் குழுவினருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் தேடல் குழுவை மாற்றி அமைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கபட்டுள்ளது. சென்னை பூவிருந்தவல்லியை சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் மதுரை, தியாகராயர் கல்லூரி தலைவர் கருமுத்து கண்ணன் என்பவர் தேடல் குழுவில் இருந்தால் தேர்வு சரியாக நடக்காது என புகார் மனு அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலை கழகம் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.