
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டியில் இனிமேல் 4 அடுக்குகள் இருக்காது. இனிமேல் ஜிஎஸ்டியில் 5% மற்றும் 18% மட்டுமே இருக்கும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் கடந்த மாதம் 22ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி வரி மாற்றங்களால் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்துள்ளது. சிறிய ரக கார்களுக்கான ஜிஎஸ்டியும் குறைக்கப்பட்டு இருந்தது.
மாற்றுத்திறனாளிகள் வரிச்சலுகை ரத்து
இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் கார்கள் வாங்குவதற்கான ஜிஎஸ்டி வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி கூறுகையில், ''உணவுப் பொருள்கள் தொடங்கி வாகனங்கள் வரை பெரும்பான்மையான பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரியின் அளவு கணிசமாக குறைக்கப்பட்டது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதைக் காரணம் காட்டி மாற்றுத்திறனாளிகள் மகிழுந்து வாங்க வழங்கப்பட்டு வந்த 10% வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
ஜி.எஸ்.டி வரிச்சீர்திருத்தத்திற்கு முன்பாக அனைத்து மகிழுந்துகளுக்கும் 28% வரி வசூலிக்கப்பட்டு வந்தது. மாற்றுத்திறனாளிகள் மகிழுந்து வாங்கும் போது அவர்களுக்கு 10% வரிச்சலுகை வழங்கப்பட்டு, 18% மட்டுமே வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது சிறிய மகிழுந்துகளுக்கான ஜி.எஸ்.டி வரி 18% ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், பெரிய மகிழுந்துகளுக்கான வரி 40% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்திற்கு பிறகு மாற்றுத்திறனாளிகள் வாங்கும் சிறிய மகிழுந்துகளுக்கான 10% வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்துப் பிரிவினருமே சிறிய மகிழுந்துகளுக்கு 18% வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல. மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை அளிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களுக்கு 10% வரிச்சலுகை வழங்கப்பட்டு வந்தது.
சலுகை ரத்தை கைவிட வேண்டும்
மாற்றுத்திறனாளிகபொதுவாகவே மகிழுந்துகளுக்கான வரிகள் குறைக்கப்பட்டதைக் காரணம் காட்டி வரிச்சலுகையை ரத்து செய்வது அநீதியாகும். மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த இந்த வரிச்சலுகை தான் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளும் மகிழுந்து வாங்குவதற்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. இந்த சலுகை நிறுத்தப்பட்டால் அவர்கள் மகிழுந்து வாங்குவதற்கான வாய்ப்புகள் தடைபட்டு போய்விடும்.
எனவே,மாற்றுத் திறனாளிகள் மகிழுந்து வாங்க அளிக்கப்பட்டு வந்த 10% ஜி.எஸ்.டி சலுகை ரத்து செய்யப்பட்டதை கைவிட வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு 6% ஜி.எஸ்.டி விதிப்பில் மகிழுந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்'' என்றார்.