முதல் நாளிலையே விரிசல்.! விசாரணை தேவை- முதல்வருக்கு எதிராக சீறும் அன்புமணி

Published : May 29, 2025, 03:17 PM ISTUpdated : May 29, 2025, 03:23 PM IST
Anbumani Ramadoss

சுருக்கம்

நாமக்கல் அருகே ₹320 கோடியில் கட்டப்பட்ட பாலத்தில் திறப்புக்கு முன்பே விரிசல் ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். 

முதல்வரால் இன்று திறக்கப்பட்ட பாலத்தில் விரிசல் அன்புமணி கண்டனம் : நாமக்கல் அருகே 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதே விரிசல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகரில் நெரிசலை குறைத்திடும் வகையில் 3.40 கி.மீ தொலைவுக்கு கட்டப்பட்டுள்ள பாலத்தின் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதும், சுற்றுச்சுவரின் கற்கள் பெயர்ந்து விழுவதும் அங்குள்ள மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. ரூ.320 கோடியில் கட்டப்பட்டுள்ள அந்த மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தான் திறந்து வைத்த நிலையில், அதற்கு முன்பாகவே பாலம் சேதமடைந்திருப்பது கட்டுமானப் பணிகளின் தரமற்றத் தன்மையைத் தான் காட்டுகின்றன.

320 கோடி ரூபாய் பாலத்தில் விரிசல்

பள்ளிப்பாளையம் பாலம் சென்னை - கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ளது. பன்னாட்டு வங்கிகளின் நிதியுதவியுடன் பாலம் கட்டப்பட்டும் போது கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும். அவ்வாறு ஆய்வுகள் செய்யப்பட்டிருந்தால் பாலம் சேதமடைந்திருக்க வாய்ப்பில்லை. இந்த கோணத்தில் பார்க்கும் போது பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது முதலே அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கக் கூடும் என்று பள்ளிப்பாளையம் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

3 மாத்த்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கட்டப்பட்ட பாலங்கள், சாலைகள் ஆகியவற்றின் தரம் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட பாலம் அடுத்த 3 மாதங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அணையிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது தான் இதற்குக் காரணம் என்று கூறி அரசு தப்பிவிட்டது.

பாலம் விரிசல் - போக்குவரத்திற்கு உகந்ததா.?

ரூ.320 கோடியில் கட்டப்பட்ட பாலம் திறக்கப்படுவதற்கு முன்பே சேதமடைவது இயல்பானது அல்ல. பாலத்தைக் கட்டுவதில் நடந்த ஊழலும், அதன் காரணமாக நடந்த தரமற்ற கட்டுமானப் பணிகளும் இதற்குக் காரணமாக இருக்க முடியும். எனவே, பள்ளிப்பாளையம் பாலத்தைக் கட்டுவதில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். பள்ளிப்பாளையம் மேம்பாலம் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ள நிலையில், அது போக்குவரத்திற்கு உகந்தது தானா? என்பது குறித்த பாதுகாப்பு தர ஆய்வுகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பேரவையில் பிரேமலதா விளாசல்: விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாத அரசுக்கு கண்டனம்!
மேகதாட்டு விவகாரத்தில் அரசின் மெத்தனப் போக்கைக் கடுமையாகத் தாக்கிய பிரேமலதா விஜயகாந்த் !