கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர். இந்தியப் பிரதமர் மற்றும் இலங்கை அதிபர் சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு மாறாக இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் கைது- தாக்குதல்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி கைது செய்திடும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில் பல ஆண்டுகளாக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திடாத இலங்கை கடற்படை நேற்று அதிகாலை துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்த நிலையில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்திய அரசு இலங்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது. இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மன்னிக்க முடியாது
வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டருந்த தமிழ்நாடு மற்றும் காரைக்கால் மீனவர்கள் 13 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் இரண்டு மீனவர்கள் படுகாயம் அடைந்ததாக கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்ற இந்திய, இலங்கை கூட்டுப் பணிக்குழு கூட்டத்திலும்,
அதைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அதிபர் அநுரா திசநாயகே சந்தித்துப் பேசிய போதும் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களை கருணையுடன் நடத்த வேண்டும்; அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தக்கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அந்த முடிவுக்கு முற்றிலும் மாறாக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பதை மன்னிக்க முடியாது என கூறியுள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு.! அதிகாலையில் வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கைக்கு அதன் மொழியில் பதில் கூறினால் தான் புரியும்
தமிழக மீனவர்கள் மீதான எந்த நடவடிக்கையையும் இலங்கை அரசு சட்டத்தின்படியோ, தர்மத்தின்படியோ மேற்கொள்வதில்லை. மாறாக, இனப்பகையின் அடிப்படையில் தான் தீர்மானிக்கிறது. அதனால் தான் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 50 மீனவர்களுக்கு சிறைத் தண்டனையையும், கோடிக்கணக்கில் அபராதத்தையும் இலங்கை அரசு விதித்திருக்கிறது. இலங்கை அரசுக்கு வேண்டுகோள்கள் விடுப்பதன் மூலம் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்த முடியாது.
இலங்கைக்கு அதன் மொழியில் பதில் கூறினால் தான் புரியும். தமிழக மீனவர்கள் மீது சிங்களப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு இந்தியாவின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். இதற்குக் காரணமான சிங்களப் படையினர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என அன்புமணி வலியுறத்தியுள்ளார்.