
காரியாபட்டி
காரியாபட்டி அருகே சவுளி தொழில் பூங்கா அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கியதை ரத்து செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரியாபட்டி அருகே தாமரைக்குளம் பொட்டல்குளத்தில் தனியார் மூலம் சவுளி தொழில் பூங்கா அமைத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அந்தப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொடக்க நிலையில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனியார் மூலம் சவுளி பூங்கா அமைக்க வழங்கப்பட்ட அனுமதியினை இரத்து செய்திடக்கோரியும், முடுக்கன்குளத்தில் மருத்துவ கழிவுகள் எரிப்பதை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பாக காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் முல்லைவேந்தன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் விருதை சங்கர், தமிழ்முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்மண்டல துணை செயலாளர் இளங்கோ வரவேற்றார்.
தமிழ்ப்புலிகள் கட்சி மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
“விவசாயத்தை பாதிக்கும் வகையில் சாயப்பட்டறை நிறுவுவதற்கு வழங்கிய அனுமதியை இரத்து செய்ய வேண்டும்.
தனியார் மூலம் சவுளி பூங்கா அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியினை இரத்து செய்ய வேண்டும்.
முடுக்கன்குளத்தில் மருத்துவ கழிவுகள் எரிப்பதை தடை செய்ய வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பேரறிவாளன், அமைப்புச் செயலாளர் முகிலரசன், தலைமை நிலைய செயலாளர் சிறுத்தை செல்வன், மாநில கொள்ளை பரப்பு செயலாளர் கலைவேந்தன், செய்தி தொடர்பாளர் தமிழ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.