
ஒரு வருடமாக, ஏ.டி.எம்மில் பணத்தை நிரப்பாமல், சொகுசாக அனுபவித்து வந்த தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 51 இலட்சத்து 34 ஆயிரத்து 900 ரூபாய் கையாடல்.
சென்னை இராமாபுரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து பணம் பெற்று அதனை ஏ.டி.எம். மையங்களில் நிரப்பும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் செயல்படுகிறது.
இந்த நிறுவனத்தின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கிளை ஊழியர்களாக செஞ்சி தாலுகா பனமலைப்பேட்டையைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் பிரபு (30), ஜெகநாதன் மகன் கதிரவன் (34) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
இவர்கள் இரண்டு பேரும் செஞ்சி, மேல்மலையனூர், வளத்தி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணம் பெற்றும், அதனை சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையங்களில் நிரப்பாமல், ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பியது போன்று போலியான ரசீது தயாரித்து தங்களது நிறுவனத்தில் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் சென்னை நிறுவனத்தில் உயர் அதிகாரிகள், ஆவணங்களை சரிபார்த்தபோது பிரபுவும், கதிரவனும் சேர்ந்து கடந்த ஓராண்டாக ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பவில்லை என்றும், சுமார் 51 இலட்சத்து 34 ஆயிரத்து 900 ரூபாய் கையாடல் செய்துள்ளனர் என்றும் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து தனியார் நிறுவன தலைமை மேலாளரான ஐ.பிரபு, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவலாளர்களிடம் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் நிறுவன ஊழியர்கள் பிரபு, கதிரவன் ஆகிய இருவரின் மீதும் காவல் ஆய்வாளர் சுந்தரேசன், உதவி ஆய்வாளர் சுப்பையா ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், விசாரணையும் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பிரபுவும், கதிரவனும் பனமலைப்பேட்டையில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்றபோது, காவலாளர்கள் அவர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.