கதிராமங்கலம் போராட்டத்தை ஆதரித்து மயிலாடுதுறையில் அனைத்துக் கடைகளும் அடைப்பு…

First Published Jul 12, 2017, 8:23 AM IST
Highlights
All shops in Mayiladuthurai are supported by the Kairamangalam struggle ...


நாகப்பட்டினம்

கதிராமங்கலத்தில் நடக்கும் மக்களின் போராட்டத்தை ஆதரித்து மயிலாடுதுறையில் உள்ள முக்கிய கடை வீதிகளில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்குழாய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருவதால் நிலத்தடிநீர் மாசுபடுவது மட்டுமின்றி வளமான விவசாயப் பகுதியே பாலைவனமாக மாறும் நிலை ஏற்படும்.

இதற்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் கடந்த 30-ஆம் தேதி கச்சா எண்ணெய் எடுக்கும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து 11-வது நாளாக போராடி வருகின்றனர்.

கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் இளைஞர்கள், மாணவ மாணவிகள், மக்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனர்.

கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்து மயிலாடுதுறையில் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்றது.

அதன்படி மயிலாடுதுறையில் உள்ள பட்டமங்கலத்தெரு, காந்திஜி சாலை, நாராயணப்பிள்ளை தெரு, பெரியக்கடை தெரு, கச்சேரி ரோடு உள்ளிட்ட முக்கிய கடை வீதிகளில் உள்ள நகைக் கடைகள், துணிக் கடைகள், மளிகைக் கடைகள், பாத்திரக் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், மூடப்பட்டதன் காரணம் அறிந்து அதனை வரவேற்றனர்.

click me!