மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் ஜன.24இல் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Published : Jan 17, 2024, 06:06 PM IST
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் ஜன.24இல் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சுருக்கம்

மதுரை அலங்காநல்லூர் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை வருகிற 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்

பொங்கல் பண்டிகையன்று மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை. தமிழ்நாட்டில் முதன்முதலாக மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதனை தொடர்ந்து பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகபிரசித்தி பெற்றது. ஆனால், ஜல்லிக்கட்டு போட்டிக்கென தனியாக இடம் எதுவும் இல்லாமல் ஊருக்குள்ளேயே நடைபெற்று வந்தன. வாடிவாசல் அருகேயுள்ள பிரதான காலரியையும் பெரும்பாலும் விஐபிக்கள் ஆக்கிரமித்து விடுவதால், ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பொதுமக்கள், வெளிநாட்டினருக்கு இடம் கிடைப்பதில்லை.

இப்பிரச்சினைகளை களையும் பொருட்டு, ஜல்லிக்கட்டை அனைத்து தரப்பினரும் கண்டுகளிக்க ஏதுவாக, அலங்காநல்லூர் அருகே கீழக் கரை கிராமத்தில் 66 ஏக்கரில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுத் திடல் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி ரூ.44 கோடி மதிப்பில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் உலகத் தரத்தில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்வையிடும் வகையில், உலகத் தரத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது, இந்த நிலையில், மதுரை அலங்காநல்லூர் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை வருகிற 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் #ஜல்லிக்கட்டு 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று, அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர். புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 இலட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். வெற்றி பெற்ற காளைகளும் - வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள்.

 

 

திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை" வரும் 24-ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் - கீழக்கரைக்கு வருகிறேன்.

தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்! எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம்!” என பதிவிட்டுள்ளார்.

2030ஆம் ஆண்டுக்குள் விபத்து மரணங்களை 50 சதவீதம் குறைக்க இலக்கு: நிதின் கட்கரி!

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்திற்கு பார்வையாளர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் ரூ.22 கோடியில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிய சாலைகளும் அமைக்கப்பட உள்ளன. மேலும், வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்கள் பரிசோதனைக்கூடம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், வீரர்கள் காத்திருப்பு அறை, கால்நடை மருத்துவமனை, தற்காலிக விற்பனைக் கூடங்கள், பொருள் பாதுகாப்பு அறை, தங்கும் அறை என அனைத்து நவீன வசதிகளுடன்  கட்டப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கதறிய மாமியார்.. விடாத மருமகன்.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்
Women's Reservation Bill: தமிழகத்தில் திமுக சிறுபிள்ளைத்தனமாக அரசியல் செய்கிறது.. மோடி குற்றச்சாட்டு