
சாதிவாரி கணக்கெடுப்பு- மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் கடைசியாக 2011 ஆம் ஆண்டில் முழுமையான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தப்பட்டது. இதனையடுத்து 2021ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட நிர்வாகச் சவால்கள் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் சாதி வாரி கணக்கெடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அந்த வகையில், அமைதி காத்து வந்த மத்திய அரசு தற்போது சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது.
சாதி வாரி கணக்கெடுப்பு - பல ஆண்டு கோரிக்கை
வரவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி கணக்கெடுப்பைச் சேர்க்க மத்திய அமைச்சரவைக் குழு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். ஏற்கனவே அம்மாவின் அரசு இருக்கும்பொழுது, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு வந்த திமுக அரசு அதை கைவிட்டுவிட்டது.
மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்
தற்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன். ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் அறிவித்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் நேரந்திர மோடிக்கு அதிமுக சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.