
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
"அ.தி.மு.க. தொடங்கப்பட்ட காலம் முதல் பல சோதனையான நேரங்களில் பலர் இந்த இயக்கத்தைக் கைவிட்டுச் சென்றிருக்கிறார்கள். 2010-க்கு முன்பாக அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு மற்றும் பலரும் கட்சியை விட்டு விலகினர். இருப்பினும், அ.தி.மு.க. எல்லா சோதனைகளையும் தாண்டி வெற்றியை நோக்கியே செல்லும்," என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
"யார் யாருடன் போனாலும், கட்சி என்பது நிரந்தரமானது, நிலையானது. அ.தி.மு.க. ஒரு இமயமலை போன்றது," என்று அவர் தெரிவித்தார்.
மேலும், "இந்த இமயமலையில் ஏற்படும் சிதறல்கள் எல்லாம் கரைந்துபோகும் பனிக்கட்டிகள் போல. மீண்டும் பனிக்கட்டி உருவாகும். அதுபோல, இயக்கம், கொள்கை, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா மீது உண்மையான நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கும்வரை, அ.தி.மு.க.வை அசைக்க முடியாது," என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் திட்டவட்டமாகக் கூறினார்.
"நிச்சயமாக 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்வதை யாராலும் தடுக்க முடியாது," என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அண்மையில் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைந்தார்.
கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த செங்கோட்டையன், நேற்று (நவம்பர் 26) தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, நேற்று மாலை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் இல்லத்திற்குச் சென்று அவரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சென்னை பனையூரில் இன்று நடைபெற்ற நிகழ்வில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். செங்கோட்டையனுடன், திருப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா உள்பட அவரது ஆதரவாளர்கள் பலரும் தவெகவில் இணைந்துகொண்டனர்.