
திருவண்ணாமலையைச் சேர்ந்த 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதில் கர்ப்பமானதால், சிறுமியின் கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என சிறுமியின் தந்தை
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி அப்துல் குத்தோஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவர்கள் சமர்ப்பித்த மருத்துவ மற்றும் சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில் கூடுதல் அதிகாரத்தைப் பயன்படுத்தி 28 வார கருவகை கலைக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
13 வயதாகும் சிறுமியின் உடல்நலம் மற்றும் மனநலத்தை கருத்தில் கொண்டு, அரசியலமைப்பு சட்டத்தின் 226 வது பிரிவின் கீழ் பாதிக்கப்பட்ட
சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதியளிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் சிறுமியால் கர்ப்பத்தை தாங்கும் அளவிற்கு அவரது உடல்நிலை மற்றும் மன வலிமை இல்லை. அதுமட்டுமல்லாமல் குழந்தையை பெற்றெடுத்தால் சிறுமி மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்படும் என்றூ விவசாயத் தொழிலாளியான சிறுமியின் தந்தையின் கூற்றை கருத்தில்கொண்டும் இந்த தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் கருக்கலைப்பை சிறப்பு அரசு மருத்துவர்கள் குழுவை நியமித்து செய்யவும் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைகளுக்காக கருவைப் பாதுகாக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, திருவண்ணாமலை குழந்தைகள் நல அமைப்பு, சிறுமிக்கும் அவரது குடும்பத்திற்கும் தேவையான வசதிகளை செய்துதருமாறு கூறி வழக்கை ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
1971 ஆம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்புச் சட்டப் பிரிவு 3(2)இன் படி, 20 வாரங்களுக்கு குறைவாக உள்ள கருவை மருத்துவர்களின் பரிந்துரை மற்றும் ஆலோசனையின்பேரில் கலைக்க அனுமதிக்கப்படுகிறது, 20
வாரங்களுக்கு அதிகமாக இருந்தால் நீதிமன்றம் தலையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.