
புதிய வகை பால் அறிமுகம்
வைட்டமின் A மற்றும் வைட்டமின் D செறிவூட்டம் செய்யப்பட்ட பர்ப்பிள் நிற பால் பாக்கெட் இன்று முதல் விநியோகம் செய்யப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு சுமார் 30 இலட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. கடந்தாண்டு சராசரி பால் விற்பனையைவிட 3 இலட்சம் லிட்டர் அதிகரித்திருக்கிறது. இந்தநிலையில், வைட்டமின் A & D செறிவூட்டப்பட்ட பால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், கண்பார்வையை மேம்படுத்துவதிலும் மற்றும் எலும்புகளை உறுதிப்படுத்துவதிலும் பங்கு வகிக்கின்றது.
செறிவூட்டப்பட்ட பால்
பாலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த சத்துக்கள், எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவையாகும். மேலும் உடலுக்கு தேவையான கால்சியத்தை பெற்றுத் தருவதில் வைட்டமின் D பங்களிப்பதினால், பாலில் வைட்டமின் D செறிவூட்டம் செய்வது மிகுந்த பயனளிப்பதாக இருக்கும் என இந்திய உணவு பாதுசாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் வைட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்ட பால் அறிமுகப்படுத்தப்படும் என சட்டசபை கூட்டத் தொடரில் பால் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித்துறை மானியத்தின்போது அறிவிக்கப்பட்டது.
பர்ப்பிள் நிற பால் பாக்கெட்
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையிலும் வாடிக்கையாளர்களின் நலன் கருதியும். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில், வைட்டமின் A மற்றும் வைட்டமின் D செறிவூட்டம் செய்யப்பட்ட பசும் பால் (பர்ப்பிள் நிற பால் பாக்கெட்) இன்று 09.05.2023 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தால் (FSSAI) பாலில் செறிவூட்டுதலுக்காக அனுமதிக்கப்பட்ட அளவில் பால் வகைகளில் வைட்டமின் A மற்றும் D செறிவூட்டம் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் செறிவூட்டம் செய்யப்பட்ட ஆவின் பசும் பால் வகையினை வாங்கி பயன்டுத்துவதினால் உடலுக்கு தேவையான வைட்டமின் A மற்றும் D கிடைக்கப்பெறும் என ஆவின் நிர்வாகம் கூறியுள்ளது.
இதையும் படியுங்கள்
அரசு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறள்..! அரசு அதிகாரிகளுக்கு திடீர் உத்தரவிட்ட தலைமை செயலாளர்