
சென்னை தண்டையார் பேட்டையில் சைக்கிளில் கடத்தப்பட்ட இரண்டரை வயது குழந்தை ஆர்.கே நகரில் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தை கடத்தியவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 18 ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மணிமேகலை என்பவரது பெண் குழந்தை சிலரால் கடத்தப்பட்டது. அந்த குழந்தையை இரண்டு பெண்கள் சேர்ந்து சதிதிட்டம் தீட்டி கடத்தி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அந்த கடத்தல் பெண்களையும் சேலத்தில் போலீசார் கண்டு பிடித்து அவரகளிடம் இருந்து குழந்தையை மீட்டனர்.
அதேபோல் சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் முகமது இலியாஸ். இவரது 2.5 வயது ஆண் குழந்தை முகமது ஷாத் , நேற்று மதியம் 12 மணியளவில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தது.
சிறிது நேரம் கழித்து இலியாஸ் மகனை தேடி வெளியே வந்து பார்த்தார். அப்போது அவரது மகன் மர்ம நபர்கள் சிலரால் கடத்தப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து இலியாஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிசிடிவி காட்சியை வைத்து பார்க்கும்போது ஒருவர் குழந்தையை சைக்கிளில் வைத்து கடத்தி செல்வது தெரியவந்தது.
இந்நிலையில், அந்த கடத்தப்பட்ட குழந்தை ஆர்கே நகரில் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தை கடத்தியவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.