ஒரு லாரி டேங்க் தண்ணீர் ரூ.500; எதுக்கு தெரியுமா?

Asianet News Tamil  
Published : Jan 20, 2017, 11:47 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
ஒரு லாரி டேங்க் தண்ணீர் ரூ.500; எதுக்கு தெரியுமா?

சுருக்கம்

மானாமதுரை

மானாமதுரையில், நிலவி வரும் கடும் வறட்சியால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகுவதால் ரூ.500க்கு ஒரு லாரி டேங்க் தண்ணீர் வாங்கி வயலுக்கு பாய்ச்சுகின்றனர்.

மானாமதுரை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவி வருவதால் ஒவ்வொரு நாளும் சாகுபடியின் பரப்பளவு பெருமளவு குறைந்து வருகிறது.

வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், பெய்த ஓரளவு மழையை சேமிக்காததாலும் பெரும்பாலான விவசாயிகள் நெல் நடவு பணிகளில் ஈடுபடவில்லை.

மானாமதுரை பகுதியில் வைகை ஆற்று பாசனம் ஒரு சில பகுதிகளில் மட்டுமே உள்ளது மற்ற பகுதிகளில் வானம் நோக்கிய பூமியாகதான் இருக்கிறது.

இருப்பினும் சில இடங்களில் விவசாயிகள் கிணற்று நீரை நம்பி நெல் நடவு பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக மழை இல்லாததால் கிணறுகளிலும் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

இதனால் கிணற்று நீர் உள்ள விவசாயிகள் மற்ற விவசாயிகளுக்கு தண்ணீர் தர மறுத்து விட்டனர்.

தற்போது நெல் நடவு செய்து 45 நாட்களாகி விட்ட நிலையில் நெல் பால் பிடிக்கும் தருணத்தில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி ஆரம்பித்துள்ளன.

மானாமதுரை பகுதி விவசாயிகள் விதை நெல் வெளியில் வாங்குவதில்லை. தங்களது நிலத்தில் விளையும் நெல்லில் ஒரு பகுதியை விதை நெல்லிற்கு எடுத்து வைத்து கொள்வது வழக்கம்.

இதனால் விதை நெல்லுக்காக கடைசி கட்ட முயற்சியாக மானாமதுரையை அடுத்த கல்குறிச்சி, புளிக்குளம், சின்னகண்ணணூர் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற டிராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

ஒரு லாரி டேங்க் தண்ணீரை ரூ.500 என கொடுத்து தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.

ஏக்கருக்கு 8 முதல் 15 முறை லாரிகள் மூலம் தண்ணீர் பாய்ச்சினால் மட்டுமே விளைச்சல் காணும் என்பதால் விவசாயிகள் வேறு வழியின்றி கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

இதுகுறித்து கல்குறிச்சி ராஜையா என்பவர் கூறும்போது, “ஒரு ஏக்கருக்கு நெற்பயிரை நான் நடவு செய்தேன். ரூ.15 ஆயிரம் செலவானது. நன்கு பயிர் வளர்ந்துள்ள நிலையில் தற்போது தண்ணீரின்றி கருக தொடங்கிவிட்டது. வேறு வழியின்றி பயிர்களை காப்பாற்ற லாரிகள் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றேன். விதை நெல் எடுக்கும் அளவிற்கு விளைச்சல் வந்தால் போதும் என்ற நிலையில் உள்ளேன்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

முத்துப்பாண்டி என்பவர் கூறுகையில், “கடுமையான வறட்சி காரணமாக நெற்பயிர் கருகுவதை கண்டு கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றோம். அரசு வறட்சிக்கான இழப்பீட்டு தொகையை உடனே வழங்கினால் நன்றாக இருக்கும்” என்றுத் தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு சி.வி. சண்முகம் கடும் எதிர்ப்பு...! | CV Shanmugam vs EPS
TVK Vijay: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு! வீட்டுக்கு போய் தரமான பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்