YearEnder 2022: 2022ல் மரணம் அடைந்த அரசியல் பிரபலங்கள் ஒரு பார்வை!!

By Narendran SFirst Published Dec 20, 2022, 9:10 PM IST
Highlights

எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத தமிழக அரசியலில் ஏராளமான அரசியல் வாதிகளும் தங்களது இருப்பை காட்டிக்கொள்ள ஆர்ப்பாட்டம், ஆளும் கட்சிக்கு ஆதரவு, எதிர்கட்சிகளுக்கு கண்டனம் என பல்வேறு செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக அரசியலில் இருந்து மறைந்த அரசியல் பிரபலங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத தமிழக அரசியலில் ஏராளமான அரசியல் வாதிகளும் தங்களது இருப்பை காட்டிக்கொள்ள ஆர்ப்பாட்டம், ஆளும் கட்சிக்கு ஆதரவு, எதிர்கட்சிகளுக்கு கண்டனம் என பல்வேறு செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக அரசியலில் இருந்து மறைந்த அரசியல் பிரபலங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.   

2022 ஆம் ஆண்டில் மறைந்த அரசியல் பிரபலங்கள்: 

நெல்லை கண்ணன்:

தமிழ்க்கடல் என்றழைக்கப்படும் நெல்லை கண்ணன், காமராஜரின் தீவிர விசுவாசி. மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி போன்றவர்களுடன் மிக நெருக்கமாக இருந்து, தமிழக அரசியலில் புகழ்பெற்று விளங்கியவர். மேலும் இவர் மிகச்சிறந்த பேச்சாளர். பன்முகம் தன்மை கொண்ட இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்து பணியாற்றினார். இவர் 1996 ஆம் ஆண்டில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் நெல்லை கண்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நெல்லை கண்ணன் திடீரென அதிமுகதான் சிறந்த கட்சி, ஜெயலலிதாதான் சிறந்த தலைவர் என்று பேசினார். இதை கண்ட  ஜெயலலிதா அவர் போயஸ் கார்டனுக்கு அழைத்து பேசினார். அதை அடுத்து 2006 ஆம் ஆண்டில் அதிமுகவுக்கு ஆதரவாக இவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், ஆக.18 ஆம் தேதி காலமானார். 

கோவை ராவணன்:

சசிகலாவின் சித்தப்பபாவான கருணாகரனின் மருமகனான கோவை ராவணன், கோவையில் தொழில் நிறுவனம் நடத்தி வந்தார். அப்போது அதிமுகவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலைக்கு சசிகலா வந்தபோது அவருக்கு கோவை ராவணன் ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் 2003-04 ஆம் ஆண்டுகளில் கொங்கு மண்டல அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர்களுக்கான ரகசிய நேர்காணல் என அனைத்தையும் ராவணன் தான் நடத்தினர்.கொங்கு மண்டல அதிமுகவை மட்டுமல்லாமல்  கோடநாடு எஸ்டேட்டையும், மிடாஸ் மதுபான தொழிற்சாலையையும்  ராவணனே நிர்வகித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த செப்.21 ஆம் தேதி மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ராவணன் உயிரிழந்தார். 

கோடியேரி பாலகிருஷ்ணன்:

2015 முதல் 2022 வரை, கோடியேரி பாலகிருஷ்ணன் CPI (M), கேரள மாநிலக் குழுவின் செயலாளராக பணியாற்றினார். வி.எஸ் அச்சுதானந்தன் அமைச்சராக இருந்த காலத்தில் உள்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். 1987ல், டெல்லிச்சேரி தொகுதியில் இருந்து கேரள சட்டமன்றத்திற்கு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 - 2006 யூ.டி.எஃப் ஆட்சியின் போது அவர் துணை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அவர் 2011 இல் பிரதி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்தார். அவர் கட்சியின் மாநிலச் செயலாளராக இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட சிபிஎம் கட்சியின் மூத்த அரசியல்வாதியான கொடியேரி பாலகிருஷ்ணன் கடந்த அக்.1 ஆம் தேதி காலமானார். 

சாமி வேலு:

மலேசியாவில் இருக்கும் தமிழ் அரசியல் தலைவர்களில் முக்கியமான சாமி வேலு. மலேசியாவின் இபோ நகரில் 1936 ஆம் ஆண்டு பிறந்த இவர், 1959 ஆம்  ஆண்டு மலேசிய அரசியிலில் கால்பதித்தார். பல்வேறு முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார். மலேசிய இந்தியன் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் செப்.15 ஆம் தேதி தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. 

சேடபட்டி முத்தையா:

சேடபட்டி சட்டசபைத் தொகுதியில் இருந்து நான்கு முறை தேர்வு செய்யப்பட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர் தான் சேடபட்டியார் என்று அழைக்கப்படும் சேடபட்டி முத்தையா. எம்ஜிஆரின் செல்லப்பிள்ளையாக இருந்த முத்தையா எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சபாநாயகராக இருந்தார். கடந்த 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதல் முறையாக முதல்வர் பதவிக்கு வந்தபோது சபாநாயகராக பதவி வகித்தவர் சேடப்பட்டி முத்தையா. மேலும் இவர் அதிமுக பொருளாளராகவும் இருந்தார். எம்.ஜி.ஆர். காலத்தில் எம்.பியாகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி முத்தையாவை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் கடந்த செப்.21 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டி.ராதாகிருஷ்ணன்:

விருதுநகர் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் மாரடைப்பால் இன்று காலமானார். இந்த தகவல் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 1955ம் ஆண்டு பிறந்த ராதாகிருஷ்ணன், கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக விருதுநகர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் விருதுநகர் மாவட்ட முன்னாள் செயலாளராகவும், மூன்று முறை சிவகாசி ஊராட்சி ஒன்றிய தலைவராகவும் இருந்தார். இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் கடந்த டிச.11 ஆம் தேதி அவர் உயிரிழந்தார். அவரது மறைவு அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

click me!