இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை… 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை

By manimegalai aFirst Published Oct 29, 2021, 8:13 AM IST
Highlights

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தஞ்சை, திருவாரூர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தஞ்சை, திருவாரூர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த பல வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. விழுப்புரம், திருப்பத்தூர், கோவை, நீலகிரி, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை கொட்டியது.

இடைவிடாது கொட்டி தீர்க்கும் கனமழையால் அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் படு வேகமாக நிரம்பின. அதே நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்  அடைந்தன.

லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதால் அரசாங்கம் உரிய இழப்பீடு தர வேண்டும் என்று விவசாய சங்கங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த பல நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. சென்னையிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது .

இந் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து தள்ளியிருக்கிறது. புரசை வாக்கம், எழும்பூர், கீழ்ப்பாக்கம், சென்னை சென்ட்ரல், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு என பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.

சென்னை மட்டும் அல்லாது மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் இடைவிடாது மழை வெளுத்து வாங்கி வருகிறது. மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழையால் தாழ்வான பகுதிகள் நீரால் சூழப்பட்டன. திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. தஞ்சை மாவட்டத்திலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் மழை கொட்டியபடி உள்ளது. நெல்லை, தூத்துக்குடி கிய மாவட்டங்களில் கனமழை விடாமல் கொட்டி வருகிறது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இடைவிடாது பெய்து வரும் தொடர் மழையால் பல மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளன. வடகிழக்கு பருவமழை காரணமாக மொத்த 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, நாகை, மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாகவும் அடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். காரைக்காலிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

click me!