தமிழக அரசு நடத்தும் மணல் குவாரியை மூட சொன்னதால் 55 பெண்கள் கைது... எங்கு நடந்தது இந்த கொடூரம்...

First Published Jun 22, 2018, 11:40 AM IST
Highlights
55 women arrested for emphasis close sand quarry runs by Tamil Nadu government


திருவள்ளூர்

திருவள்ளூரில் உள்ள ஆரணி ஆற்றில் இயங்கி வரும் தமிழக அரசின் மணல் குவாரியை மூட வேண்டும் என்று மறியல் போராட்டம் நடத்திய 55 பெண்களை காவலாளார்கள் கைது செய்தனர். 

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை நகர எல்லையில் பாய்கிறது ஆரணி ஆறு. இந்த ஆரணி ஆறுதான் ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. 

இந்த ஆற்றின் கரைகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் தேக்க மேல்நிலை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தண்ணீர் அனுப்பப்பட்டு குழாய்களில் குடிநீர் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. குடிநீருக்காக மட்டுமல்ல விவசாயத்திற்கும் இந்த ஆறே கதி என்று விளைநிலங்கள் உள்ளன. 

இந்த நிலையில் தமிழக அரசு இங்கு மணல் குவாரியை தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊத்துக்கோட்டையில் அனைத்து கடைகளும் மூடபட்டன. அனைத்து கட்சி தொண்டர்கள் பங்கேற்ற மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. மேலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சாலை மறியல் போராட்டமும் நடந்தது.

இந்த நிலையில், "மணல் குவாரியை உடனடியாக மூட வேண்டும்" என்று ஊத்துக்கோட்டை அண்ணாசிலை அருகில் நேற்று மதியம் ஏராளமான பெண்கள் மறியலில் ஈடுபட்டனர். 

இவர்களுக்கு தி.மு.க. மகளிர் அணியை சேர்ந்த சாந்தி, மகளிர் குழு தலைவி குமுதா ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரதாசன், ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளர் பாலு மற்றும் காவலாளர்கள் மறியலில் ஈடுபட்ட 55 பெண்களை கைது செய்தனர். 

click me!