ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு... பேருந்து கண்ணாடி உடைப்பு... 500 பேர் கைது!!

First Published Jul 27, 2017, 12:53 PM IST
Highlights
500 dmk cadres arrested


போலீசாரின் அனுமதியையும் மீறி சேலம் கட்சராயன் ஏரி பகுதியை பார்வையிட சென்ற திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 500 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இன்று சேலம் வருகை தந்தார். அதேபோல் சேலத்தில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் அவர் கலந்து கொள்வதாக இருந்தது.

முன்னதாக கோவை விமான நிலையம் சென்ற அவர், அங்கிருந்து சேலம் செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தபோது கோவை, சுங்கச்சாவடி அருகே ஸ்டாலின் தடுத்து நிறுத்தப்பட்டார். 

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலத்தில், மனித சங்கிலி போராட்டத்துக்குத்தான் தடை போட்டுள்ளார்களே தவிர, சாலையில் செல்ல கூடாது என்று தடை போடவில்லை. எனவே தடையையும் மீறி கட்சராயன் ஏரியை பார்வையிடுவேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், அனுமதியையும் மீறி மு.க.ஸ்டாலின் செல்ல முயன்றதால், அவரை போலீசார் கைது செய்தனர். 

ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை அடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அங்கு நின்றிருந்த அரசு பேருந்த கண்ணாடியை அவர்கள் உடைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக மு.க.ஸ்டாலின், கட்சராயன் ஏரியை பார்வையிட வரும்போது, தன்னை போலீசார் கைது செய்தால், திமுக தொண்டர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபடாமல், மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த நிலையில், திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

click me!