வடகிழக்கு பருவமழை.. இதுவரை 26 பேர் பலி.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published Nov 6, 2022, 2:09 PM IST
Highlights

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை, கள நிலவரம், மீட்புப் பணிகள் மற்றும் வானிலை குறித்த தகவல்களை பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” 

வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை பாதிப்பு காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். 
29 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. 67 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன. 

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை காரணமாக விழுந்த 66 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 648 இடங்களில் தேங்கி இருந்த மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 819 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன.

சென்னையில் மட்டும் 17 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 43 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கூடுதலாக தலா 2 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் தமிழகம் முழுவதும் 43 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தேசிய பேரிடர் மீட்புப் படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர்.121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.

இதுவரை 1070 கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக 417 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது, அதில் 268 தொலைபேசி அழைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளது. 149 தொலைபேசி அழைப்புகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க:விவசாயிகள் கவனத்திற்கு.. நவ.15 க்குள் பயிர்களுக்கு காப்பீடு செய்ய தமிழக அரசு அறிவிப்பு..

சென்னையில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது தொடர்பாக வரப்பெற்ற மொத்தம் 217 தொலைபேசி அழைப்புகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

நீர் வெளியேற்றம் நிலவரம்: 

செம்பரம்பாக்கத்தில் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்போது 20.89 அடி இருக்கிறது. தற்போது செம்பரம்பாக்கத்திற்கு 310 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 679 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 21.20 அடி, தற்போது 18.80 அடியாக இருக்கிறது. தற்போது ஏரிக்கு 292 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 259 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. 

வானிலை நிலவரம்: 

இந்திய வானிலை ஆய்வும் மையம் கொடுத்ஹ்ட அறிக்கையின் படி, இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நவ.9 ஆம் தேதி இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் என்றும், இது வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மேலும் படிக்க:வைகை அணையிலிருந்து நீர் வெளியேற்றம் அதிகரிப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

 

click me!