தமிழக மருத்துவ கல்லூரியில் 24 எம்பிபிஎஸ் இடங்கள் வீண்...? அதிர்ச்சியில் மாணவர்கள்..!

By Ajmal KhanFirst Published Apr 14, 2022, 11:24 AM IST
Highlights

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத எம்பிபிஎஸ் இடங்களை மத்திய சுகாதாரத் துறை, மாநிலங்களுக்கு திருப்பி வழங்காததால், நடப்பாண்டில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 24 எம்பிபிஎஸ் இடங்கள் நிரம்பாமல் உள்ளன.
 

அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 886 இடங்கள் 

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது தமிழக மருத்துவ கல்லூரியில் 24 எம்பிபிஎஸ் இடங்கள் வீணாக உள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 82 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் உள்ள  37 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், இரண்டு அரசு பல் மருத்துவ கல்லூரிகளிலும் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 7,825 எம்பிபிஎஸ் மற்றும் 2,060 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 1,742 இடங்கள் உள்ளன. இந்தநிலையில்  இந்தியா முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. அவ்வாறு தமிழகத்திலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 886 இடங்கள் வழங்கப்பட்டன. 

24 மருத்துவ படிப்பு இடங்கள் வீண்?

இந்த இடங்களுக்கான கலந்தாய்வையும், சிறப்புக் கலந்தாய்வையும் மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வு குழு நடத்தி முடித்தது, அதில், தமிழகத்திலிருந்து ஒதுக்கப்பட்டதில் 24 இடங்கள் நிரம்பாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த இடங்கள் தற்போது வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துவிடாதா என  தமிழக மாணவர்கள் ஏங்கி காத்திருக்கும் நிலையில் அந்த இடங்கள் தமிழக மாணவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. எனவே மத்திய அரசு, தனது கொள்கை முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டு அனைத்து மாநிலங்களுக்கும் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து இது தொடர்பாக பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

click me!