
திருவள்ளூர்
அடகு வைத்த வீட்டு பத்திரத்தை திருப்பி தருவதற்கு பெண்ணிடம் ரூ.14 ஆயிரம் இலஞ்சம் கேட்ட வழக்கில் வீட்டு வசதி கூட்டுறவு சங்க அதிகாரிக்கு 21 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே குமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷின் மனைவி புவனேஸ்வரி (45). இவர், பொன்னேரி வீட்டு வசதி கடன் சங்கத்தில் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.20 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். இதனைக் கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பரில் வட்டியும், அசலும் சேர்த்து ரூ.67 ஆயிரத்தை வங்கியில் செலுத்தியுள்ளார்.
அப்போது, இச்சங்கத்தின் செயலாளர் சுந்தரராமன் (40) தனக்கு ரூ.14 ஆயிரம் கொடுத்தால் அடமானப் பத்திரத்தை தருகிறேன் என்று புவனேஸ்வரியிடம் கூச்சமே இல்லாமல் இலஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னை மாவட்ட இலஞ்ச ஒழிப்பு காவலாளர்களிடம் புவனேஸ்வரி புகார் அளித்தார். அதனடிப்படையில் காவலாளர்கள் கூறிய ஆலோசனையின்படி, இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அளித்தனர்.
அதனை, கடந்த 19.06.2009 அன்று புவனேஸ்வரி முதல் தவணையாக ரூ.4000 தருவதாகக் கூறி செயலாளர் சுந்தரராமனிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் சுந்தரராமனை கையும், களவுமாக பிடித்து வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் செயலாளர் சுந்தரராமனுக்கு 21 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்ததோடு, அபராதம் செலுத்தாவிட்டால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.