
திருப்பூர்
திருப்பூரில் உயர்நிலைப் பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய பள்ளி நிர்வாகம் சொன்னதால் தொட்டிக்குள் இறங்கிய மாணவி வெளியேற முடியாமல் தவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது வெள்ளகோவிலில் மகளிர் உயர்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியின் மாடியில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி ஒன்றுள்ளது. இந்தத் தொட்டியை சுத்தம் செய்யும்படி, அங்கு படிக்கும் மாணவி ஒருவருக்கு பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த மாணவியும், மாடிக்குச் சென்று தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி தொட்டியை சுத்தம் செய்துள்ளார்.
ஆனால், தொட்டிக்குள் இறங்கிய மாணவியால் தொட்டிக்கு மேலே ஏறி வர முடியவில்லை. இதனால் அவர் தொட்டிக்குள் இருந்து கொண்டு சத்தம் போட்டு அலறியுள்ளார்.
நீண்ட நேரத்திற்கு பிறகு பள்ளி ஊழியர்கள், சிறிய மேசை ஒன்றை தொட்டிக்குள் இருந்த மாணவியிடம் கொடுத்தனர். பின்னர், அதனைப் பயன்படுத்தி அந்த மாணவி தொட்டிக்குள் இருந்து வெளியேறினார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பெற்றோர்கள் மற்றும் மக்கள், பள்ளியை முற்றுகையிட்டு பள்ளிக்கு படிக்கச் செல்லும் மாணவிகளை தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய சொன்ன பள்ளி நிர்வாகத்தை கண்டித்தனர்.
மேலும், இதுபற்றி கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
பள்ளியில் வேலை ஆட்கள் இருந்தும் ஏன் நிர்வாகம் அந்த மாணவியை தொட்டியை சுத்தம் செய்ய சொன்னது? என்று காரணத்தை நிர்வாகம் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.