
திருவள்ளூர்
திருவள்ளூரில் இரண்டு வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் உள்ள இயந்திரங்களை கடப்பாரையால் உடைக்க முயன்றும் உடைக்க முடியாததால் கடுப்பான கொள்ளையர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல் இரயில் நிலையம் நிலையம் முன்பு பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையமும், தனியார் ஏடிஎம் மையமும் உள்ளன.
இங்கு, நேற்று அதிகாலை இந்த இரண்டு ஏ.டி.எம் மையங்களுக்குள்ளும் நுழைந்த மர்ம நபர்கள் சிலர், கடப்பாரை போன்றவற்றைக் கொண்டு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து பணம் எடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால் இயந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த நிலையில், நேற்று காலை வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கு மக்கள் பணம் எடுக்கச் சென்றபோது, இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், இதுகுறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரின் வந்த சென்ற காவலாளர்கள், நிகழ்விடத்தைப் பார்வையிட்டு, வங்கிக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு இரண்டு வங்கிகளின் அலுவலர்களும் வந்து ஆய்வு நடத்தினர். இதில், பணம் கொள்ளை போகவில்லை என்பதை தெரிந்து பெருமூச்சு விட்டனர்.
மேலும், இரண்டு ஏ.டி.எம். மையங்களுக்கும் காவலாளி இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட காவலாளர்கள், "முதலில் காவலாளியை நியமியுங்கள்"என்று அறிவுரை வழங்கினர்.
இதுகுறித்து திருமுல்லைவாயல் காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.