ஒரேநாளில் ஹெல்மெட் போடாத 1500 பேருக்கு அபராதம்... சட்டத்தை ஸ்டிரிக்டா ஃபாலோ பண்ணும் போலீஸ்...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 29, 2018, 6:56 AM IST
Highlights

பைக் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த காஞ்சிபுரம் காவலாளர்கள் தெருக்கூத்து கலைஞர்களை பயன்படுத்தினர். விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருக்கும்போதே ஹெல்மெட் போடாத 1528 பேருக்கு காவல்துறை அபராதம் விதித்தது.
 

காஞ்சிபுரம்

பைக் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த காஞ்சிபுரம் காவலாளர்கள் தெருக்கூத்து கலைஞர்களை பயன்படுத்தினர். விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருக்கும்போதே ஹெல்மெட் போடாத 1528 பேருக்கு காவல்துறை அபராதம் விதித்தது.

'பைக் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர் என இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்' என்று சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து  அதனைத் தீவிரமாக கண்காணிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதிலும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் காவல்துறை முழுமூச்சாக செயல்படுகிறது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில், "இருசக்கர வாகனம் ஓட்டுபவர், பின்னால் அமர்ந்து செல்பவர் என இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்" என்று உத்தரவு வெளியிடப்பட்டது. 

இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பலப் பகுதிகளில் வாகன ஓட்டிகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வலுவான விழிப்புணர்வை ஏற்படுத்த கிராமிய காவல் ஆய்வாளர் வெற்றிச்செல்வன் சிந்தையில் தோன்றிய வழிதான் தெருக்கூத்து.

பொன்னேரிக் கரையில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தெருக்கூத்து கலைஞர்களைக் கொண்டு வாகன ஓட்டிகளுக்கு நேற்று தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். 

காஞ்சிபுரத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கில் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களை, "எமன் மற்றும் சித்ரகுப்தன்" வேடமிட்டிருந்த தெருக்கூத்து கலைஞர்கள் கைகாட்டி நிறுத்தினர்.  'தலைக்கவசம் அணிய வேண்டும். இல்லையெனில் உயிர் போயிடும்' என அவர்களுக்கு அறிவுறுத்தி விழிப்புணர்வு உண்டாக்கினர்.

இதேபோல, தலைக்கவசத்தோடு வந்த வாகன ஓட்டிகளுக்கு சிவன் வேடமணிந்த கலைஞர்கள் மாலை அணிவித்து வெகுவாக பாராட்டுவது போல விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதனிடையே, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 963 பேர், பின்னால் அமர்ந்து சென்ற 565 பேர் என 1528 பேருக்கு காவலாளர்கள் அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!