இனி 15 வகையான சான்றிதழ்கள் ஈஸியா வாங்கிக்கலாம்...! முதலமைச்சரின் அதிரடி திட்டம் அறிமுகம்...!

First Published Mar 3, 2018, 9:17 AM IST
Highlights
15 types of certifications can now be purchased


இ-சேவை மையம் வழியாக பொதுமக்கள் விவசாய வருமானம், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட 15 வகையான சான்றிதழ்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மின்னாளுமை திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் வழியாக  பொதுமக்களுக்கு  சாதி, வருமான, இருப்பிட, முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ் ஆகிய 5 சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. 

இனி விவசாய வருமான சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், கலப்புத் திருமணச் சான்றிதழ், விதவைச் சான்றிதழ், வேலையின்மைச் சான்றிதழ், குடும்ப குடிப்பெயர்வு சான்றிதழ், கல்வி ஆவணங்கள் பேரிடரால் தொலைந்தமைக்கான சான்றிதழ், ஆண் குழந்தை இன்மைச்  சான்றிதழ், திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், செல்வ நிலைச் சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், வட்டிக்கு பணம் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ் உள்ளிட்ட 15 வகை சான்றிதழ்களை இணையதள மின் சேவை மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்ததாகவும் இந்த 15 சேவைகளை பெறுவதற்கு பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள பொதுசேவை மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கும் போது, விண்ணப்ப எண்ணுடன் ஒப்புகைச் சீட்டு  வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்விவரம்,  அவர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் எனவும்  விண்ணப்பங்களின் நிலவரத்தை அறிய பொதுமக்கள் 155250 என்ற எண்ணிற்கு  தங்களது விண்ணப்ப எண்ணை குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பியோ அல்லது இணையதளத்தில் விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்தோ அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 விண்ணப்பம் ஏற்கப்பட்டு சான்றிதழ் தயாரானதும்,  விண்ணப்பதாரருக்கு இணையதள முகவரியுடன்  குறுஞ்செய்தி அனுப்பப்படும்.  இந்த குறுஞ்செய்தி பெறப்பட்டவுடன் விண்ணப்பதாரர் வீட்டில் இருந்தவாறே  இணையதளம் மூலமாக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது  அருகாமையிலுள்ள அரசு பொது சேவை  மையம் மூலமாக சான்றிதழை  பெற்றுக் கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!