
தூத்துக்குடி
தூத்துக்குடியில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 145 விவசாயிகளை காவலாளர்கள் கைது செய்தனர்.
"கடந்த 2015-2016-ஆம் ஆண்டு பயிர் காப்பீடு செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் மேலவாசலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்று,பேருந்து நிலையம் சென்றடைந்தனர். அங்கு அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு சங்க மாவட்டச் செயலாளர் நல்லையா தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், தாலுகா செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி (எட்டயபுரம்), சுப்பையா (விளாத்திகுளம்), தாலுகா குழு உறுப்பினர்கள் ராமையா, செல்வம், மாரிச்சாமி, இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ரவீந்திரன், மாதர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் கஸ்தூரி, ஆட்டோ ஓட்டுநர் சங்கம் ஹரி உள்பட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
விவசாயிகளின் இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து தடைப்பட்டது. சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதைத் தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட 145 விவசாயிகளை எட்டயபுரம் காவல் ஆய்வாளர் ராமையா மற்றும் காவலாளர்கள் கைது செய்தனர்.