
திருப்பூர்
திருப்பூர், தாராபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் மரத்தின் மீது மோதியதில் அதில் பயணித்த 12 பேர் பலத்த காயம் அடைந்தனர். வேலை முடிந்து நூற்பாலை ஊழியர்கள் வீட்டுக்குச் செல்லுபோது இந்த விபத்து ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் – திருப்பூர் சாலையில் குண்டடம் பிரிவு அருகே ஆர்.ஆர்.டி. டெக்ஸ் என்கிற தனியாருக்குச் சொந்தமான நூற்பு ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்த நூற்பு ஆலையில் வேலை செய்த ஊழியர்களில் 20 பேர், நேற்று மாலை வேலை முடிந்ததும் நூற்பு ஆலைக்குச் சொந்தமான வேன் ஒன்றில் ஏறி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர்.
வேன் தாராபுரத்தை கடந்து அலங்கியம் சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது, சீத்தக்காடு அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த மில் ஊழியர்களான, திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா மானூரைச் சேர்ந்த நாகராஜன் மனைவி இலட்சுமி (43), பாஸ்கரன் மனைவி மகுடீஸ்வரி (50), பிச்சைமுத்து மனைவி மாரியாத்தாள் (37), நெய்க்காரபட்டியை சேர்ந்த மதனபூபதி என்பவரின் மனைவி பத்ரா (30), பழனியை சேர்ந்த கருப்புச்சாமி (28) மற்றும் அய்யப்பன், கவிதா, சுதா, நாகதேவன் உள்பட 12 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இதனைக் கண்ட அருகில் அருகில் இருந்தவர்கள் உடனே காயம் அடைந்தவர்கள் மீட்டு அவசரஊர்தி மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக இலட்சுமி, மகுடீஸ்வரி, மாரியாத்தாள், பத்ரா மற்றும் கருப்புசாமி ஆகிய ஐவர் மட்டும் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து தாராபுரம் காவலாளர்கள் வழக்கு பதிந்து விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.