மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலாதேவியை நினைவிருக்கா? தீர்ப்புக்கு தேதி குறித்த நீதிமன்றம்!

By vinoth kumarFirst Published Apr 6, 2024, 9:39 AM IST
Highlights

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயற்சி செய்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயற்சி செய்த வழக்கில் நிர்மலா தேவி மீதான வழக்கில் ஏப்ரல் 26ம் தேதி ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியையாக நிர்மலா தேவி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயற்சி செய்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு அப்போதைய எஸ்.பி.யும் தற்போதைய தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐ.ஜி.யுமான ராஜேஸ்வரி விசாரணை நடத்தி ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். பின்னர் இந்த வழக்கு மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கு தொடர்பாக மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து ஏப்ரல் 1-ம் தேதி இறுதி கட்ட வாதங்கள் நடைபெற்றது. இந்நிலையில், ஏப்ரல் 26ம் தேதி இந்த  வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என நீதிபதி பகவதி அம்மாள் அறிவித்துள்ளார். 

click me!