'புதிய மாவட்டத்தில் சேர்க்க வேண்டாம்'..! கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்..!

By Manikandan S R SFirst Published Nov 15, 2019, 12:08 PM IST
Highlights

விழுப்புரத்தில் இருந்து பிரித்து புதியதாக உருவாக்கியிருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தங்களை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுவதாக கடந்த ஜனவரி மாதம் சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து புதிய மாவட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் தாலுகாக்கள் அடங்கிய அரசாணையை அண்மையில் தமிழக அரசு வெளியிட்டது.

அதில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட பெரியசெவளை,டி.கொளத்தூர், சரவணநல்லூர், ஆமூர் ஆகிய பகுதிகள் புதியதாக உருவாக்கப்பட்டிருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது அந்த கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாவட்ட பிரிப்பு சம்பந்தமாக நடந்த கருத்து கேட்கும் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்திலேயே தொடர வேண்டும் என்று அக்கிராமத்தினர் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தநிலையில் புதிய மாவட்டத்தில் இணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் கொந்தளித்த அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் திரண்டு மறியல் செய்தனர். பழைய மாவட்டமான விழுப்புரத்திலேயே தங்கள் கிராமங்கள் நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் புதிய மாவட்டத்தில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர். 

இதையும் படிங்க: ஒரு நாள் தலைமை ஆசிரியை..! அதிரடியாக செயல்பட்டு அசத்திய அரசு பள்ளி மாணவி..!

click me!