ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை..! தீராத கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு..!

By Manikandan S R SFirst Published Oct 18, 2019, 11:54 AM IST
Highlights

விழுப்புரம் அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே இருக்கிறது குயிலிப்பாளையம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது வீடு கடந்த மூன்று நாட்களாக பூட்டி இருந்த நிலையில் துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ஆரோவில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த காவலர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுந்தர மூர்த்தி அவரது மனைவி மற்றும் இரு மகள்களுடன் இறந்து கிடந்தார். நான்கு பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளனர். உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றனர். 

இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த  காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் சுந்தரமூர்த்திக்கு அதிகமான கடன் பிரச்சனையில் சிக்கி தவித்தது தெரியவந்தது.. கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து பணத்தை திருப்பி கேட்டதால் மனஉளைச்சலில் இருந்திருக்கிறார். இதன்காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

சுந்தரமூர்த்தியின் மனைவி சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். அவரது முதல் மகள் கிருத்திகா(17) பிளஸ் 2 வும் இரண்டாம் மகள் சமிக்ஷா (13) எட்டாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடன் பிரச்சனையால் குடும்பத்துடன் சுந்தரமூர்த்தி தற்கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
 

click me!