கணவரின் இழப்பை தாங்காமல் இளம்பெண் எடுத்த சோக முடிவு..! அதிர்ச்சியில் உறைந்துபோன உறவினர்கள்..!

By Manikandan S R SFirst Published Oct 6, 2019, 1:23 PM IST
Highlights

காட்பாடி அருகே கணவர் இறந்த துக்கம் தாளாமல் இளம் பெண் ஒருவர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே இருக்கிறது கல்புதூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி திவ்யா. வயது 25. சீனிவாசன் பேருந்து நடத்துனராக வேலை பார்த்து வந்திருக்கிறார்.  இந்த தம்பதியினருக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் ஒருவர் மீது ஒருவர் அதீத அன்புடன் இருந்துள்ளனர். அதிலும் கணவர் மீது அளவுகடந்த பாசத்தை திவ்யா வைத்திருந்திருக்கிறார்.

இந்தநிலையில் கடந்த வாரம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சீனிவாசன் மரணம் அடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த திவ்யா கணவர் உடலைப் பார்த்து கதறி துடித்து இருக்கிறார். அவரை உறவினர்கள் தேற்றி இருக்கின்றனர். ஆனாலும் திவ்யா கணவரின் நினைவுகளை மறக்க முடியாமல் மனமுடைந்து காணப்பட்டு இருக்கிறார். 

இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது கணவரின் இழப்பை தாங்கமுடியாத அவர் வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்து இருக்கிறார். இதனால் துடிதுடித்து வீட்டில் மயங்கி கிடந்ததை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்குள்ளாக திவ்யா உயிரிழந்தார். இதனை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.

அக்கம்பக்கத்தினர் இந்த தற்கொலை சம்பவம் குறித்து காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் இறந்த ஒரு வாரத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!