வேலூரில் பயங்கரம்.. பட்டாசு கடையில் வெடிவிபத்து.. தாத்தாவுடன் தீயில் கருகி பலியான 2 பிஞ்சுக் குழந்தைகள்..!

By vinoth kumarFirst Published Apr 18, 2021, 3:07 PM IST
Highlights

வேலூரில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கடை உரிமையாளர் மற்றும் அவரது பேரக்குழந்தைகள் 2 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேலூரில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கடை உரிமையாளர் மற்றும் அவரது பேரக்குழந்தைகள் 2 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பேருந்து நிலையம் அருகே மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. இன்று காலை மோகன் பட்டாசு கடையை திறந்து வியாபாரம் செய்து வந்தார். அப்போது சிலர் பட்டாசு வாங்க வந்தனர். குடோனில் இருந்த பட்டாசுகளை எடுத்து வந்து வாடிக்கையாளர்களுக்கு மோகன் காண்பித்தார். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில், மளமளவென்று வெடித்து தீ பட்டாசு குடோன் முழுவதும் பரவியது.

பட்டாசு குடோனில் மோகனின் 2 பேரப்பிள்ளைகள் இருந்ததால் அவர்களை காப்பாற்ற மோகன் அங்கு ஓடினார். அதற்குள் குடோன் முழுவதும் தீ பரவி பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதனால் குடோனில் சிக்கியவர்கள் வெளியே வராமல் உள்ளே மாட்டிக் கொண்டனர். இதில், 3 பேரும் உடல் சிதறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இந்த விபத்து தொடர்பாக உடனே காவல்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!