Tamilnadu floods பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்ட 7 இளைஞர்கள். மரத்தை பிடித்து தொங்கியவர்கள் பத்திரமாக மீட்பு!

By manimegalai aFirst Published Nov 14, 2021, 7:58 PM IST
Highlights

நாட்டாற்றில் மரத்தை பிடித்துக்கொண்டு தொங்கியவர்களிய கயிற்றைக் கட்டி மீட்கும் பணி தோல்வியில் முடிந்தது.

நாட்டாற்றில் மரத்தை பிடித்துக்கொண்டு தொங்கியவர்களிய கயிற்றைக் கட்டி மீட்கும் பணி தோல்வியில் முடிந்தது.

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததல ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. மேட்டூர் அணை இரண்டு வருடங்களுக்குப் பின்னர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிர கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக காவிரி கரையோர 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை கொட்டித் தீர்க்கும் கன்னியாகுமரியிலும் பெருஞ்சானி, பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகள் முழுவதும் நிரம்பியுள்ளன. கனமழையால் பல ஊர்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கரைகள் உடைந்து குடியிருப்புகளிலும், விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. ஒரு சில ஊர்களில் சாலைகளிலும் தண்ணீர் பாய்ந்து ஆறுகள் போல் காட்சியளிக்கிறது.

அணைகள் நிரம்பத் தொடங்கியதில் இருந்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள ஆற்றுப் பகுதிகளுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், விடுமுறை காரணமாக அனைத்து பகுதிகளிலும் மகக்ள் அச்சமின்றி நீர்நிலைகளில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். ஆபத்தை உணராமல் நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகாரிகளை அச்சமடையச் செய்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக அரக்கோணம் அருகே பரபரப்பு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. கனமழை எதிரொலியாக பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் பாலாற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. பாலாற்றில் மக்கள் இரங்கவோ, குளிக்கவோ வேண்டம் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் அரக்கோணம் அருகே ஓச்சேரியில் இருந்து மாமண்டு கிராமம் வழியாக பாய்ந்தோடும் பாலாறில் இளைஞர்கள் குளிக்கச் சென்றனர். அவர்கள் குளித்துக்கொண்டிருந்த போதே ஆற்றில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஒரு சிலர் அங்கிருந்து தப்பித்து ஓட கண் இமைக்கும் நேரத்தில் 7 இளைஞர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் அலறியடித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேரும், ஆற்றின் குறுக்கே இருந்த மரம் ஒன்றை பிடித்துக் கொண்டு உயிருக்காக போராடினர்.

திரைப்படங்களில் வருவது போன்ற நடைபெற்ற இந்த நிகழ்வு பொதுமக்களை பதட்டமடையச் செய்தது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள், ஆற்றில் தத்தளித்த இளைஞர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். முதல் கட்டமாக மரத்தை பிடித்துக் கொண்டு தத்தளித்தவர்களை கயிற்றைக் கட்டி கரை சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இது தோல்வியில் முடிந்ததால், இளைஞர்கள் தங்கள் கதை முடிந்ததாக நினைத்து அலறினர்.

பாலாற்றில் தத்தளித்த இளைஞர்கள் மீட்பு

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பேரிடர் மீட்புப் படையினர் இளைஞர்களை மீட்க திட்டம் வகுத்தனர். அதன் தொடர்ச்சியாக அசுர வேகத்தில் தண்ணீர் ஓடும் பாலாற்றின் குறுக்கே ரப்பர் படகுகள் மூலம் சென்ற பேரிடர் மீட்புப் படையினர், நட்டாற்றில் உயிருக்கு போராடிய 7 இளைஞர்களையும் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர். இளைஞர்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை சுட்டிக் காட்டியுள்ள பொதுப்பணி துறை அதிகாரிகள், மக்கள் கவனமுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்

click me!