
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜ்குமார். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இவரும், கந்திலி காவல் நிலையத்தில் பணிபுரியும் சோபியா என்பவரும் கடந்த 2021ம் ஆண்டில் காவலர் பயிற்சியின் போது பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு பணியில் இருந்த ராஜ்குமார் சோபியாவுடன் செல்போன் மூலம் வீடியோ காலில் பேசி கொண்டிருந்ததாகவும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ராஜ்குமார் திடீரென நகர காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர் அறைக்கு சென்று தாழிட்டு கொண்டு அவர் வைத்திருந்த சால்வையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதுள்ளார். உடனடியாக சோபியா வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் அறைக்குள் இருந்த உதவி ஆய்வாளரை அழைத்து, அவர் அறை தாழிட்டுள்ளதால் காவலர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின்விசிறியில் தூக்கில் தொங்குவதற்காக நின்று கொண்டிருந்த ராஜ்குமாரை மீட்டு சக காவலர்கள் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வாணியம்பாடி காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் நகர காவல்நிலையத்திற்கு விரைந்து சென்று காதல் பிரச்சினையால் ராஜ்குமார் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.