55 கி.மீ வேகத்தில் பயங்கர சூறைக்காற்று..! மீனவர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை..!

By Manikandan S R SFirst Published Dec 23, 2019, 1:01 PM IST
Highlights

குமரிக்கடல் பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வந்ததையடுத்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து பல முக்கிய அணைகள் நிரம்பிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வடகிழக்கு பருவ மழை தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. எனினும் தென்மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது.

திருநெல்வேலி,தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 3 நாட்களாக கனமழை பெய்து வந்தது. இந்தநிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருதாகவும் வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். குமரிக்கடல் பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் பல மாவட்டங்களில் பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லை என்றும் வேலூரில் 26 சதவீதமும், பெரம்பலூரில் 28 சதவீதமும், சென்னையில் 17 சதவீதமும் மழை குறைந்திருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

click me!