இந்த 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

By vinoth kumarFirst Published May 19, 2021, 1:33 PM IST
Highlights

தமிழகத்தில் நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தென்மேற்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்காக சாத்திய கூறுகள் இருக்கின்றன. 

தென் தமிழக கடலோர பகுதியில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை இன்று இரவு 2 முதல் 3.4 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழும்பக்கூடும். மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மே 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் உதகையில் 4 செ.மீ., கிருஷ்ணராயபுரத்தில் 3 செ.மீ., பேரையூர், கலட்டி, நிலக்கோட்டையில் தலா 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. 

click me!