3,610 ரூபாய் உண்டியல் சேமிப்பு..! கொரோனா நிதியுதவியாக கலெக்டரிடம் கொடுத்த குழந்தைகள்..!

By Manikandan S R SFirst Published Apr 11, 2020, 3:04 PM IST
Highlights

சிறுவயது முதல் தாங்கள் உண்டியலில் சேமித்த பணத்தை நிவாரண நிதியாக வழங்க நினைத்து தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த பெற்றோரும் சம்மதித்து இரு குழந்தைகளையும் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் அழைத்து சென்றனர். 

உலக அளவில் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 7 ஆயிரத்து 400 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நிலையில் 239 பேர் பலியாகி இருக்கின்றனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு தேவையான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் ஏழை மக்களுக்கு உதவும் பொருட்டும் பொதுமக்களிடம் நிதி அளிக்கும்படி பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதை ஏற்று பொது மக்கள், முன்னணி நிறுவனங்கள், திரை பிரபலங்கள், அரசியல் கட்சிகள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் தங்கள் சேமிப்பு பணத்தை நிவாரண நிதியாக அளித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே இருக்கும் வன்னிவேடு பகுதியை சேர்ந்தவர் கோகுல். இவருடைய இரு மகன்கள் முகுந்தன் மற்றும் ஹரீஷ். தற்போது கொரோனா வைரஸால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்வேறு தரப்பினரும் நிவாரணநிதி அளிப்பதை இருவரும் செய்திகள் வாயிலாக அறிந்தனர்.

இதையடுத்து சிறுவயது முதல் தாங்கள் உண்டியலில் சேமித்த பணத்தை நிவாரண நிதியாக வழங்க நினைத்து தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த பெற்றோரும் சம்மதித்து இரு குழந்தைகளையும் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் சேமித்து வைத்திருந்த 3610 ரூபாய் பணத்தை கொரோனா  நிவாரண நிதியாக பயன்படுத்திக் கொள்ளும்படி ஆட்சியரிடம் வழங்கினர். அதைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் திவ்ய தர்ஷினி நெகிழ்ச்சி அடைந்து இரு குழந்தைகளையும் மனதார பாராட்டி இருக்கிறார்.

click me!