நிச்சயதார்த்தம் செய்து விட்டு திரும்பிய போது பயங்கரம்.. புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் துடிதுடித்து பலி..!

By vinoth kumarFirst Published Jun 28, 2021, 10:51 AM IST
Highlights

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

சென்னையை சேர்ந்தவர் சந்திரமவுலி (55). இவரது மனைவி வசுந்தராதேவி (45), இவர்களது மகன் வேணுகோபால் (26). வேணுகோபாலுக்கு பெண் பார்க்க சென்னையில் இருந்து ஓசூருக்கு காரில் கிளம்பினர். ராணிப்பேட்டை வந்து அங்கு வசித்து வரும் சந்திரமவுலியின் தந்தை கன்னையர் (94) என்பவரை அழைத்துக்கொண்டு 4 பேரும் ஓசூர் சென்றனர். பின்னர், வேணுகோபாலுக்கு நிச்சயதார்த்தம் செய்து விட்டு நேற்று இரவு காரில் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். காரை வேணுகோபால் ஓட்டி வந்தார். அப்போது, கார் ஆம்பூர் அருகே செங்கலிகுப்பம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. 

காரில் இருந்த புதுமாப்பிள்ளை வேணுகோபால், தாத்தா கண்னையர் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். சந்திரமவுலி மற்றும் அவரது மனைவி வசுந்தராதேவி ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே அப்பகுதியினர் மீட்டு  ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், பாதியிலேயே வசுந்தராதேவி உயிரிழந்தார். சந்திரமவுலிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிச்சயம் செய்து விட்டு ஊர் திரும்பும் வழியில் புது மாப்பிள்ளை மற்றும் அவரது தாயார், தாத்தா ஆகிய 3 பேரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!