ஆம்பூரில் தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு.. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஓடோடி வந்து உதவிய எஸ்.பி.விஜயகுமார்.!

By vinoth kumarFirst Published Jul 21, 2020, 6:55 PM IST
Highlights

ஆம்பூரில் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் இன்று அதிகாலை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆம்பூரில் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் இன்று அதிகாலை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புதுமனை பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் முகிலன் (27). கடந்த 12ம் தேதி முழு ஊரடங்கை மீறி தேவையில்லாத காரணங்களுக்காக இருசக்கர வாகனத்தில் சுற்றியதால் அவரது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த முகிலன், அருகில் உள்ள தன் அக்கா வீட்டுக்குச் சென்று மண்ணெண்ணெய் கேனை தூக்கிக் கொண்டுவந்துள்ளார்.`போலீஸ்தான் என் சாவுக்கு காரணம் என்று கூறி தேசிய நெடுஞ்சாலையில் நின்றபடி தீக்குளித்தார்.

இதில், பலத்த தீக்காயம் அடைந்த முகிலன் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல்  பிரேதப் பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

இது தொடர்பாக திருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமார் கூறுகையில்;- தீக்குளித்த நபரின் உயிரைக் காப்பாற்றுவது மட்டுமே எங்களுடைய முதல் நோக்கமாக இருந்தது. அதற்காகத்தான் சி.எம்.சி மருத்துவமனையில் உயர்தர சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் இறந்தது மிகவும் மனம் வருத்தமாக உள்ளது. ஆனால், அவர் குடிபோதையில் இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். இறந்த நபருக்கு 3 குழந்தைகள் உள்ளது. 

மருத்துவத்துக்கான செலவு மட்டும் கிட்டத்தட்ட மூன்று, நான்கு லட்சம் ரூபாய் ஆகியிருக்கிறது. காவல்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து அதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளோம். இறந்த நபரின் மனைவிக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவும், மாதாந்தர உதவித் தொகை கிடைக்கவும் ஆட்சியர் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறோம் என்றார். 

click me!