ஒரே நாளில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த இரு பச்சிளம் குழந்தைகள்..! தொடர்ந்து அலட்சியம் காட்டும் பெற்றோர்கள்..!

By Manikandan S R SFirst Published Nov 2, 2019, 11:43 AM IST
Highlights

நேற்று ஒரே நாளில் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் இரண்டு குழந்தைகள் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பொன்மாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி தேவி. இந்த தம்பதியினருக்கு ரீகன், பிரசாத்(1½) ஆகிய இரு மகன்கள் இருந்துள்ளனர். ராஜசேகர் திருப்பூரில் வேலை பார்த்து வந்திருக்கிறார். தேவி தனது மகன்களுடன்  வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை தேவி தனது தம்பி வீட்டிற்கு குழந்தைகளை அழைத்து சென்றுள்ளார். அங்கே குழந்தை பிரசாத் விளையாடிக் கொண்டு இருந்துள்ளான். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக பிரசாத் அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. குழந்தையை காணாமல் தேடிய உறவினர்கள், பிரசாத் தண்ணீர் தொட்டியில் மயக்கமுற்று கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர்.

பின்னர் உறவினர்கள் உதவியுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மகனைக் கொண்டு தேவி சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்ற ஒரு சம்பவம் வேலூரிலும் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இருக்கிறது வீராங்குப்பம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் வீரமணி என்கிற செல்வபாண்டியன். இவரது மனைவி ரம்யா. இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். வீரமணி முன்னாள் ஊராட்சிமன்ற துணைத்தலைவராக இருந்துள்ளார். ரம்யா அருகே இருக்கும் வெங்கடேசமுத்திரம் தபால் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல ரம்யா வேலைக்கு சென்று விட்டார். வீரமணியும் வெளியில் சென்றுவிடவே, குழந்தைகள் வீரமணியின் தாயார் விஜயா கண்காணிப்பில் இருந்துள்ளனர். இதனிடையே விஜயா வீட்டில் துணி துவைத்து கொண்டு இருந்துள்ளார். அவரின் அருகே ரம்யாவின் இரண்டாவது குழந்தை யஷ்வந்திகா(4) விளையாடிக்கொண்டு இருந்திருக்கிறார். துவைத்த துணிகளை காயப்போடுவதற்காக விஜயா சென்றுள்ளார்.

அப்போது விளையாடிக்கொண்டிருந்த குழந்தை யஷ்வந்திகா தண்ணீர் பேரலில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மூச்சு திணறி குழந்தை யஷ்வந்திகா மயக்கமுற்று கிடந்திருக்கிறாள். திரும்பி வந்த விஜயா, குழந்தையை தேடியுள்ளார். தண்ணீர் பேரலில் யஷ்வந்திகா மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே திருச்சியில் குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்குள் மீண்டும் குழந்தைகள் அஜாக்கிரதையால் பலியாகும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

click me!