தண்ணீர் தொட்டியில் தலைகுப்புற விழுந்த 1 வயது குழந்தை..! மூச்சுத்திணறி பலியான பரிதாபம்..!

By Manikandan S R SFirst Published Feb 21, 2020, 4:21 PM IST
Highlights

வாலாஜா அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 1 வயது குழந்தை பலியாகியது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே இருக்கும் கொண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28). இவரது மனைவி ஐஸ்வர்யா. இந்த தம்பதியினருக்கு தர்ஷினி (4) என்கிற மகளும், எழிலன்(1) என்கிற மகனும் உள்ளனர். சென்னையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் உதயகுமார் பணியாற்றி வருகிறார். குழந்தைகளை ஐஸ்வர்யா கவனித்து வந்துள்ளார்.

இவர்களது வீட்டின் முன்பாக தண்ணீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வீட்டில் குழந்தை எழிலன் தூங்கி கொண்டிருந்துள்ளான். அப்போது ஐஸ்வர்யா அருகே இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். குழந்தை விழிப்பதற்குள் வந்துவிடலாம் என எண்ணிய அவர், முன்பக்க கதவை அடைக்காமல் சென்றதாக தெரிகிறது. அவர் சென்ற பிறகு விழித்த குழந்தை தவழ்ந்தவாறே வீட்டு வாசலுக்கு வந்துள்ளது. தண்ணீர் தொட்டி அருகே வந்த குழந்தை திடீரென தவறி உள்ளே விழுந்தது.

அதை யாரும் கவனிக்காததால் சில நிமிடங்கள் குழந்தை உள்ளேயே தத்தளித்துள்ளது. சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யா குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குழந்தையை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின் மேல்சிகிச்சைக்காக குழந்தை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டநிலையில் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தை உயிரிழந்த தகவல் கேட்டு பெற்றோரும் உறவினர்களும் கதறி துடித்தனர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு குழந்தையின் உடல் பிரேதபரிபோசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக பிரமுகர் கடையில் சரமாரி முட்டை வீச்சு..! அறந்தாங்கியில் பரபரப்பு..!

click me!