காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்

By Velmurugan sFirst Published Jul 15, 2023, 12:47 PM IST
Highlights

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் பள்ளி கட்டிடம், அங்கன்வாடி மையம், பொது சுகாதார வளாகம் உள்ளிட்ட நிறைவுற்ற வளர்ச்சி திட்ட பணிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளியில் பொதுசுகாதார வளாகத்தை திறந்து வைத்த அமைச்சர் பின்னர் மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேலும் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் வழங்கப்படக் கூடிய உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, தமிழக முதல்வரின் கனவு திட்டமான காலை சிற்றுண்டி திட்டத்தினை அடுத்த கட்டமாக அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களை  கண்டறிந்து அவர்களை தேர்வு எழுத வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பள்ளி மேலாண்மை குழுவினரை வலியுறுத்தி வருகிறோம்.

திருச்சி பேருந்து நிலையத்தில் சாமானிய பெண் மீது கொடூர தாக்குதல் நடத்திய பெண் போலீஸ்

பள்ளிகளின் கட்டிடபராமரிப்பு, புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் மூலமாக 6796 பள்ளிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கட்டிடங்கள் தொடர்பாக  பள்ளி மேலாண்மை குழுவினர் வைக்கக்கூடிய கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். 

தற்போது பள்ளி மேலாண்மை குழு மூலமாக  தற்காலிக ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மிக நீண்ட செயல்பாடாக உள்ளது. ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான  சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் வழக்குகள் இதையெல்லாம் சரி செய்து புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கு சற்று காலம் தேவைப்படுகிறது. மேலும் 3000 ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு ஆறு மாத காலங்கள் ஆகிறது.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக வீடு வீடாக செல்லும் ஆசிரியர்கள்; மாணவர்கள் பாதிப்பு?

தற்காலிக ஆசிரியர்களை நியமிக்காமல் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் நிரப்பப்படாமல் உள்ள காலி பணியிடங்களால் தற்பொழுது காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு தொய்வு ஏற்பட்டு வருகிறது. விரைவில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் சீர் மரபினர் பள்ளிகள் ஆகியவற்றை பள்ளி கல்வித்துறையுடன் இணைப்பது குறித்து பல கருத்துக்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அந்தந்த துறையிடம் கருத்து கேட்பது நடத்தப்பட்ட பின்னர் அதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று முதலமைச்சர் என்ன வலியுறுத்துகிறாரோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

click me!