திருச்சியில் ஈஷாவின் பாரத பாரம்பரிய நெல் திருவிழா! தமிழகம் முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்பு

By SG BalanFirst Published Jul 30, 2023, 9:24 PM IST
Highlights

தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநில விவசாயிகளும் பங்கேற்றனர். பாரம்பரிய விதைகள், விவசாயிகளே உருவாக்கிய எளிய வேளாண் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

‘பாரத பாரம்பரிய நெல் திருவிழா’ ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் நோக்கிலும் இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் நடைபெறும் இந்த விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.

தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இத்திருவிழாவில் திருச்சி மேயர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசுகையில், “விவசாயத்தை எப்படி பேண வேண்டும், மண் வளத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என விளக்கும் நிகழ்ச்சியாக இந்நிகழ்வு உள்ளது" என்றார். மக்கள் ஆரோக்கியமாக வாழ மண்வளம் மிகவும் அவசியம் என்றும் இயற்கை விவசாயம் செய்து மண் வளத்தை பாதுகாத்தால் நோயற்ற வாழ்வு வாழலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

திருச்சி: விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.. விவசாயிகள் அரை நிர்வாண காத்திருப்பு போராட்டம்

இதேவை உணர்ந்து பாரம்பரிய நெல் திருவிழாவை ஏற்பாடு செய்துள்ள ஈஷா அறக்கட்டளைக்கும் அவர் பாராட்டுக்களை தெரிவித்தார். இவ்விழாவில் சென்னையைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோரான மேனகா சிறப்பு பேச்சாளராக பங்கேற்றார். அவர், “நான் 13 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்கிறேன். தொழில் தொடங்கும்போது பாரம்பரிய நெல் ரகங்கள் பற்றி எதுவும் தெரியவில்லை. இப்போது அது குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது" என்றார்.

மேலும், கொரோனா தொற்றுக்குப் பின் மக்கள் ஆரோக்கியமாக இருக்க அதிக கவனம் செலுத்துகிறார்கள் எனவும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்கள் பற்றி அதிக அளவில் தேடித் தெரிந்துகொள்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். மக்களிடம் ஏற்பட்டு வரும் விழிப்புணர்வால் அவற்றை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு பலன் கிடைக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார்.

மதுரையைச் சேர்ந்த இயற்கை உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் தினேஷ் மணி பேசுகையில், விளைபொருட்களை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றினால் நீண்ட காலம் வைத்து விற்பனை செய்ய முடியும் என்றும் கெட்டுப்போகும் என்று பயந்து விலையைக் குறைத்து விற்கவேண்டிய அவசியம் இருக்காது என்றும் எடுத்துரைத்தார்.

பிரபல பூச்சியியல் வல்லுநர் திரு. பூச்சி செல்வம், உணவியல் வல்லுநர் திரு. சக்திவேல் ஆகியோரும் பேசினர். இவ்விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகளும் பங்கேற்றனர். பாரம்பரிய விதைகளுடன் விவசாயிகளே உருவாக்கிய எளிய வேளாண் கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

click me!