திருவண்ணாமலையில் முதல் கொரோனா பலி..! 55 வயது பெண் மரணம்..!

By Manikandan S R SFirst Published May 6, 2020, 10:54 AM IST
Highlights

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்போது மரணமடைந்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை 34 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கியிருக்கிறது. 

இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களாக தினமும் 500ஐ கடந்திருக்கிறது. நேற்று 508 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2,537 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

தற்போதைய நிலவரப்படி 1,485 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்போது மரணமடைந்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை 34 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளார். இது திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் கொரோனா பலி ஆகும். அங்கு இதுவரை 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனர். அவர்களில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!