லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை... தப்பியோடிய கொள்ளையனை சுற்றி வளைத்த போலீஸ்... நகை கொள்ளையில் அடுத்தடுத்து திருப்பம்!

By Asianet TamilFirst Published Oct 4, 2019, 9:56 PM IST
Highlights

தப்பியோடிய சுரேஷனை திருச்சி தனிப்படை போலீசாருடன் சேர்ந்து  திருவாரூர் போலீசார் மாவட்டம் முழுவதும் சல்லடை போட்டு தேடினர். சுரேஷின் தாய், நண்பர்கள் உள்பட 5 பேரைப் பிடித்து விசாரித்தார்கள். 

திருச்சி லலிதா ஜூவல்லரியில் நடந்த கொள்ளையில் தொடர்புடைய இரண்டாவது கொள்ளையன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் 13 கிலோ நகைகள் கொள்ளை போயின. முகமூடி சகிதம் வந்த கொள்ளையர்கள் இருவர் ஜூவல்லரியில் இருந்த நகைகள் முழுவதையும் அள்ளிக்கொண்டு போனது சிசிடிவியில் பதிவான காட்சியில் தெரிந்தது. இதையடுத்து கொள்ளையர்களைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் திருவாரூர் மடப்புரம் பாலம் அருகே நேற்று இரவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது பைக்கில் வந்த இருவரில் போலீஸைக் கண்டதும் ஒருவர் கையில் இருந்த அட்டைப் பெட்டியைப் போட்டுவிட்டு ஓடினார். பைக்கை ஓட்டிவந்த நபரை மட்டும் போலீஸார் பிடித்தனர். அட்டை பெட்டியைச் சோதித்தபோது அதில் லலிதா ஜூவல்லரியில் இருந்த நகைகள் இருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் மணிகண்டன் என்றும் தப்பியோடியது சுரேஷ் என்பதும் தெரியவந்தது. 


இதனையடுத்து தப்பியோடிய சுரேஷனை திருச்சி தனிப்படை போலீசாருடன் சேர்ந்து  திருவாரூர் போலீசார் மாவட்டம் முழுவதும் சல்லடை போட்டு தேடினர். சுரேஷின் தாய், நண்பர்கள் உள்பட 5 பேரைப் பிடித்து விசாரித்தார்கள். இந்த விசாரணையின் அடிப்படையில் இன்று மாலை 6 மணியளவில் சுரேஷை போலீஸார் சுற்றிவளைத்து  கைது செய்தனர். அவரை திருவாரூரில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்துவருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் முருகன் என்பரைப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். 

click me!