தனியார் பேருந்து-ஆட்டோ நேருக்கு நேர் பயங்கர மோதல்..! வயல் வேலைக்கு சென்ற 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!

By Manikandan S R SFirst Published Oct 24, 2019, 4:50 PM IST
Highlights

திருவள்ளுர் அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் மூன்று பேர் பலியாகி உள்ளனர்.

திருவள்ளுர் அடுத்து இருக்கும் பேரம்பாக்கம் அருகே இருக்கிறது சிவபுரம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் வேலு(45). இவரது தம்பி கார்த்திக்(35). இவர்கள் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் மணி(60). மூவரும் விவசாய தொழில் பார்த்து வருகின்றனர். அந்த பகுதியைச் சேர்ந்த 6 பேருடன் ஒரு ஆட்டோவில் தலக்காஞ்சேரியில் நடக்கும் வயல் வேலைக்கு கிளம்பியுள்ளனர். ஆட்டோவை ஓட்டுநர் பிரபு என்பவர் ஒட்டியிருக்கிறார்.

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் திருபாத்தூர் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது அதே சாலையின் எதிரே தனியார் கம்பெனி பேருந்து ஒன்று ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஆட்டோ அப்பளம் நொறுங்கியதில் அதில் பயணம் செய்த வேலு மற்றும் கார்த்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர். மணி, ஆட்டோ ஓட்டுநர் பிரபு உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.


இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதிய லாரி..! தூக்கி வீசப்பட்டு இருவர் பரிதாப பலி..

அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்து இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மணி உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறை மூன்று பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!